லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் ‘அரண்மனை 2’ படத்தின் 103 அடி நீளமான அம்மன் சிலை !

லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் ‘அரண்மனை 2’ படத்தின் 103 அடி நீளமான அம்மன் சிலை !

அரண்மனை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு இயக்குநர் சுந்தர் சி  இயக்கத்தில் உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம் அரண்மனை 2. இந்த படத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூணம் பாஜ்வா, சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரமேற்று நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
அரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்காக 103 அடி நீளமான பிரம்மாண்ட அம்மன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டு அதன் முன் ஏராளமான நடன கலைஞர்கள் மற்றும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை கொண்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்காக உருவாக்கப்பட்டுள்ள அம்மன் சிலையானது ஆசியாவிலேயே மிக பெரிய அம்மன் சிலை என்றும். இதை போன்ற 103 அடி நீளமான அம்மன் சிலை வேறு எங்கும் கிடையாது என்று படக்குழுவினர் கூறினார். இந்த அம்மன் சிலை லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்னும் உலக சாதனை முயற்ச்சிகள் இடம் பெறும் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. பிரம்மாண்டமான அம்மன் சிலையை உருவாக்கியவர் கலை இயக்குநர் குருராஜ்.
இந்த சிலையை உருவாக்கிய கலை இயக்குநர் குருராஜ் அவர்கள் கூறியதாவது, அரண்மனை 2 படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்கு பிரமாண்டமான அம்மா சிலை ஒன்று தேவை அதை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கலாம் என்று தான் யோசித்தோம். அதன் பின் அதை பார்க்கும் போது உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் நிஜ அம்மன் சிலையை 103 அடி உருவாக்க முடிவு செய்து வேலையை ஆரம்பித்தோம். மிக பெரிய வேலைப்பாடுக்கு பின்பு நானும் என் குழுவும் இந்த சிலையை உருவாக்கி முடித்தோம். இந்த சிலை செய்து முடிக்க நாற்ப்பது நாட்களுக்கு மேல் ஆனது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ், ஸ்கேலிடன் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு சிலை நாங்கள் உருவாக்கினோம். முறைப்படி அம்மன் சிலையை வடிவமைப்பவர்கள் அதை எப்படி உருவாக்குவார்களோ அதே போல் விரதம் இருந்து முறைப்படி இந்த 103 அடி அம்மன் சிலையை நானும் என் குழுவினரும் உருவாக்கினோம். இதை போன்ற அம்மன் சிலை எங்கும் பார்க்க முடியாது என்றும் இந்த சிலை சிறப்பாக வர மௌல்டர் மணி மற்றும் குழுவினர் முக்கிய காரணம் என்றும் கூறினார்.
அடுத்ததாக ஷோபி மாஸ்டர் கூறியதாவது ; அரண்மனை 2 படத்துக்காக இந்த பிரமாண்ட 103 அடி உயர அம்மன் சிலை முன்பு அம்மன் பாடலை இயக்குவது எனக்கு மிகவும் வியப்பாகவும் புதுமையாகவும் உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் சுந்தர் சி அவர்களுக்கு நன்றி. நான் இதுவரை எத்தனையோ பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளேன். அதில் கோவில் முன்பு, கோவில் திருவிழா போன்ற பாடல்கள் அடங்கும். ஆனால் இப்போது தான் முதன்முறையாக முழுமையான ஒரு அம்மன் பாடலை இயக்கியுள்ளேன். இயக்குநர் சுந்தர் சி என்னிடம் அம்மன் பாடலுக்கு நடனம் அமைக்க வேண்டும் அதுவும் 103 அடி உயர மிக பிரம்மாண்டமான அம்மன் சிலைக்கு முன்பு பாடலை மிக பெரிய அளவில் படமாக்க வேண்டும் என்றதும் என்னுள் ஆர்வம் தொற்றிகொண்டது . அதற்க்கு இணையாக எனக்கு மற்றும் ஒரு ஆர்வம் எனக்கு இருந்தது, அது ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் ” அம்மன் பாடல் எப்படி வந்திருக்கும் என்ற ஆர்வம் தான். எப்போதும் ஹிப்ஹாப் மற்றும் பல்வேறு வித்தியாசமான பாடல்களுக்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகி இருக்கும் அம்மன் பாடலை கேட்க ஆர்வமாக இருந்தேன். பாடலை கேட்டவுடன் நான் நிஜமாகவே அசந்துவிட்டேன் நிஜமாகவே பாடல் சிறப்பாக வந்துள்ளது. இசையில் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இப்போது இங்கே அந்த பாடலுக்கு ஏராளமான நடன கலைஞர்களை கொண்டு பாடலுக்கு நான் நடனம் அமைத்து வருகிறேன். எனக்கு இது புதுமையான  அனுபவமாக உள்ளது என்றார்.
ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார் பேசியது; ஆரண்மனை 2 படத்துக்காக பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 103 அடி உயர அம்மன் சிலையின் முன்பு படப்பிடிப்பு நடத்துவது எனக்கு புதுமையாக உள்ளது. பல நாட்கள் உழைப்பில் உருவான அம்மன் சிலையின் முன்பு பிரமாண்டமான முறையில் இயக்குநர் சுந்தர் சியோடு நாங்கள் இந்த பாடலை உருவாக்கி வருகிறோம். கிளைமாக்ஸ் பாடல் காட்சியாக உருவாகி வரும் இந்த பாடல் நிச்சயம் பேசப்படும் என்றும். லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ் என்னும் உலக சாதனை புத்தகத்தில் பாடல் காட்சியில் இடம் பெரும் 103 அடி உயர அம்மன் சிலை இடம் பெற உள்ளது என்று கூறினார்.
Share