கிராமத்துக் கதையில் ‘மெட்ரோ’ சிரிஷ் நடிக்கும் ‘பிஸ்தா’

கிராமத்துக் கதையில் ‘மெட்ரோ’ சிரிஷ் நடிக்கும் ‘பிஸ்தா’

கதைக்கு தகுந்த சரியான நடிகர்களை கொண்ட கிராமப்புற படங்களுக்கு  என்றுமே தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளனர். ‘சுப்ரமணியபுரம்’ , ‘பருத்திவீரன்’, ‘களவாணி’ போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். ‘மெட்ரோ’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகர் சிரிஷ், தற்பொழுது கிராமப்புறம் சார்ந்த காமெடி படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ”ஒரு அருமையான கிராமப்புற காமெடி படத்தில் நடிக்கவுள்ளேன் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி. ‘மெட்ரோ’ படத்தின் எடிட்டர் ரமேஷ் பாரதி இந்த படத்தை இயக்கவுள்ளார். இயக்கத்தில் ஆர்வமுள்ள அவர், ‘மெட்ரோ’ படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருந்த போதே ஒரு கதையை தயார் செய்துகொண்டிருந்தார். அந்த கதையை என்னிடம் கூறியபொழுது அது என்னை மிகவும் ஈர்த்தது. இக்கதையின் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை எனக்கு அவர் அளித்தபொழுது, அவ்வாய்ப்பை நழுவவிடாமல் உடனடியாக பிடித்துக்கொண்டேன்.  சந்தையில் வேலை செய்யும் கதாபாத்திரம் என்னுடையது. இப்படத்திற்கு ‘பிஸ்தா’ என பெயரிட்டுள்ளோம். ஏன் இந்த தலைப்பு என்பதை வரும் தினங்களில் மக்கள் அறிவார்கள். ‘அயல் ஜனல்லா’ என்ற மலையாள படத்தில் நடித்து புகழ் பெற்ற ம்ரிதுல்லா முரளி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ‘சைத்தான்’ படத்தில் நடித்த அருந்ததி நாயர் மற்றோரு நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு தரன் இசையமைக்கவுள்ளார்.  இது காமெடி கதை என்பதால் துணை நடிகர்களுக்கு பெரும் முக்கியத்துவமுள்ளது. சதிஷ், யோகி பாபு மற்றும் சென்றாயன் ஆகியோர் இக்கதையின் மூலம் சினிமா ரசிகர்களை சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடிக்கவுள்ளனர். கும்பகோணம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமாக்கவுள்ள ‘பிஸ்தா’ வின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ‘பிஸ்தா ‘ காதல் மற்றும் காமெடி கலந்த கொண்டாட்டமாக இருக்கும் . இது இசையமைப்பாளர் தரனின் 25வது படமாகும். இவரது இசை இப்படத்திற்கு மேலும் பலம் கூட்டும்  ” என நம்பிக்கையோடு கூறினார் நடிகர் சிரிஷ்.
Share