“ரங்கூன் படத்தின் நாயகி சிம்ரன் இடத்தை பிடிப்பார்…” – இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நம்பிக்கை

“ரங்கூன் படத்தின் நாயகி சிம்ரன் இடத்தை பிடிப்பார்…” – இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நம்பிக்கை

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரங்கூன்’. கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து கொண்டு இசைத் தட்டினை வெளியிட்டார். 

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசும்போது, “வழக்கமா நடக்கிற மாதிரி கதை கேட்டு நான் இந்த படத்துக்கு ஒப்பந்தம் ஆகலை. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என் நண்பர். முழுப் படத்தையும் எடுத்திட்டு போட்டுக் காட்டி படத்துக்கு பின்னணி இசை அமைக்க சொன்னார். கூடவே படத்தில் இரண்டு பாடல்களுக்கும் இசையமைத்தேன், அவை இரண்டுமே படத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் வரும் பயணத்தை பின்னணி இசையின் மூலம் நகர்த்தியிருக்கிறேன். பர்மீஷ் மொழி பாடல் வரிகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறோம்…” என்றார்.

படம் பற்றிப் பேசிய ஹீரோ கெளதம் கார்த்திக், “இயக்குநர் ராஜ்குமார் இந்தப் படத்தில் நான்தான் நடிக்கணும் என எனக்காக நின்றார். ரொம்ப அன்பானவர்.. தெளிவான இயக்குநர்.. எனக்கு இப்படியொரு நல்ல படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி.

அதிலும் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை என்கிட்ட சொல்லும்போது எனக்கு அப்படியொரு சந்தோஷமும், திகைப்பும் வந்துச்சு. ஸ்கிரிப்ட்ல ஒரு சின்ன கரெக்சன்கூட நாம சொல்ல முடியல. அந்த அளவுக்கு பெர்பெக்ஷனா இருந்த்து. அதேபோல ஷூட்டிங்லேயும் ரொம்ப, ரொம்ப பெர்பக்ஷன் பார்த்தாரு. இவருடைய இயக்கத்தில் நடித்தது எனக்கொரு புதிய அனுபவம்..

சண்டை பயிற்சியாளர்களான அன்பு அறிவு இரட்டையர்கள் ஒரு மேஜிக் மாதிரி. அவர்களுடன் இந்த படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுன்னாலே எனக்கு எப்பவுமே பயம்.  ஆனால் இந்த படத்தில் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன்…” என்றார்.

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசும்போது, “இங்க எல்லோரும் என்னை பற்றி அதிகமா புகழும்போது எனக்கு இன்னும் கொஞ்சம் பயமும், அதிக பொறுப்பும் வந்திருக்கு.

இதே கோடம்பாக்கத்தில் என்னை மாதிரி நிறைய திறமையான உதவி இயக்குநர்கள் படம் இயக்கும் முயற்சியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே ஜெயிச்சவங்க.. ஜெயிக்காதவங்கன்னு யாருமே இல்லை.. வாய்ப்பு கிடைச்சவங்க, வாய்ப்பு கிடைக்காதவங்க இருக்காங்கன்றதுதான் உண்மை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார் முருகதாஸ்.

அவருக்கு உதவி இயக்குநர்கள்தாம் குடும்பம். உதவி இயக்குநர்களுக்கு என்ன உதவினாலும் முதல்ல வந்து நிற்பவர். என்ன பிரச்சினைனாலும் அவர்கிட்ட வேலை பார்க்கிறமோ.. இல்லையோ.. ஒரு சின்னதா மெஸேஜ் மட்டும் தட்டிவிட்டால் போதும், உடனேயே லைனுக்கு வந்து என்ன, ஏதுன்னு விசாரித்து உதவிகளை செய்வார். இவரிடம் வேலை செய்தால் நிச்சயமாக படம் இயக்கி விடலாம். அவர் இந்த மாதிரி படம் தயாரிக்கிறதுக்கு முக்கிய காரணமே நிறைய திறமையானவர்களை அறிமுகப்படுத்துவதற்காகத்தான்.

கௌதம் கார்த்திக் தன் எல்லைகளில் இருந்து வெளியே வந்து ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார். ஊட்டி கான்வெண்ட்ல படிச்சவர், வடசென்னை இளைஞராக கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்தாலும், படத்தின் உண்மைத் தன்மைக்காக கடுமையாக மெனக்கெட்டிருக்கிறோம். படத்தின் தலைப்பு பாடலான ‘யாத்ரீகா’ என்ற பாடலை மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் எழுதிக் கொடுத்தார். அவருக்கு எங்களது மனப்பூர்வமான நன்றி..” என்றார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது, “இயக்குநர் ராஜ்குமார் என்னிடம் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் எனக்காக வந்து என் படங்களுக்கு உதவி செய்பவர். ஒரு முதல் பட இயக்குநரின் படத்தை நான்தான் தயாரிப்பேன் என் இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு நின்றார்கள் என்றால் அது இந்த ராஜ்குமார் பெரியசாமிக்குத்தான். அந்த வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. நாங்கள் இவரைப் பயன்படுத்திக் கொண்டோம்.

சிலர் உதவி இயக்குநர் ஆவதற்கே ரொம்பவும் கஷ்டப்படுவார்கள், ஒரு சிலர் இயக்குநர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். ராஜ்குமார் இரண்டுக்குமே ரொம்ப கஷ்டப்பட்டார். புதுப்புது இடங்களாக தேடித் தேடி, திரையில் தான் நினைத்ததை கொண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வந்து இயக்குநராகி இருக்கும் ராஜ்குமார் வெற்றி பெற்றால்தான் அவரை போல முயற்சி செய்து வரும் பலருக்கும் நம்பிக்கை வரும்.

நாயகன் கௌதம் கார்த்திக் படத்துக்காக தன் நிறத்தை மாற்றி, பாடி லாங்குவேஜ் மாற்றி நடித்துள்ளார். சிம்ரனின் முதல் படத்தில் நான் உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறேன், அதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில் நாயகி சனா, சிம்ரன் விட்டு சென்ற இடத்தை பிடிப்பார் என நம்புகிறேன். நல்ல படங்களை கொடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்…” என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் சி.இ.ஓ.வான விஜய் சிங், நாயகி சனா, படத்தின் இன்னொரு இசையமைப்பாளர் விக்ரம், நடன அமைப்பாளர் சதிஷ், சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவு ஆகியோரும் பேசினார்கள்.

Share