2016 ஆம் ஆண்டுக்கான பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது பெறுகிறார் ம. செந்தமிழன்

2016 ஆம் ஆண்டுக்கான பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது பெறுகிறார் ம. செந்தமிழன்

திராவிடர் கழக தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12 ம் நாள் சாலை விபத்தின் காரணமாக 44ம் வயதில் உயிர் நீத்தார்.

பெரியார் திடல் மற்றும் விடுதலை நாளேட்டின் மக்கள் தொடர்பாளராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய தோழர் பெரியார் சாக்ரடீஸ் பிற்பாடு “தமிழக அரசு” இதழிலும் செய்தியாளராக அரசுப் பணி செய்து வந்தார்.

சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட சாக்ரடீஸ் அவர்கள் பெரியார் கொள்கையின் குணக் குன்றாகவே வாழ்ந்து காட்டியவர் .

2011ம் ஆண்டு செம்மொழி மாநாட்டையொட்டி 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்னாள் அமைச்சர் திரு. பரிதி இளம் வழுதி, ஆய்வாளர் டாக்டர் திரு,நாச்சி முத்து எழுத்தாளர் திரு. அஜயன் பாலா ஆகியரோடு இதழாளர் திரு பெரியார் சாக்ரடீஸ் அவர்களும் இணைந்து செம்மொழி சிற்பிகள் எனும் அரிய நூலை உருவாக்கி தந்து தமிழுக்கு தன் அரிய சேவையை செய்துள்ளார்.

இந்நூலை உருவாக்க் அவர் மேற்கொண்ட முயற்சிகளும் காட்டிய தீவிரமும் பட்டியலை உருவாக்குவதில் அவர் காட்டிய முனைப்பும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் தமிழ் அறிவுக்கும் சிறந்த சான்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மகளுக்கு தமிழ் ஈழம் என பெயர் வைத்து அழகு பார்த்தவர்.

அப்படிப்பட்டவருடைய எண்ணங்கள் தொடர்ந்து நீடிக்கும் வகையில் அவரோடு நெருங்கி பழகிய திரு. நாச்சி முத்து , திரு. அஜயன் பாலா ஆகியோர் இணைந்து பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது எனும்ஒரு அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவரது எண்ணமும் உணர்வும் தொடர்ந்து நம்மோடு இயக்கம் கொள்ள முடிவு செய்தோம் அதன் படி வருடா வருடம் ஊடகம், இதழியல், இணையம், பண்பாடு சமூக சேவை மற்றும் கலாச்சார பணிகளில் அர்ப்பணிப்புடன் சீரிய் தொண்டாற்றி வரும் யாரேனும் ஒருவருக்கு அந்த விருதை வழங்க உத்தேசித்துள்ளோம்.

2015ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது .

அந்த வரிசையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் விருது திரு. ஆர் பி அமுதன் ஆவணப்பட இயக்குனர் அவர்களுக்கு காட்சி ஊடக துறையில் அவரது சீரிய பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு9 2016 )இந்த விருதுக்கு பண்பாட்டு துறையில் தீவிரமாக இயங்கி வருபவரும் இயற்கை வாழ்வியல் துறைக்காக் இன்று தன் வாழ்க்கையை அர்ப்பணித்து செம்மை எனும் அமைப்பு மூலம் இழந்து வரும் நம் மண்ணின் அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பல அரிய சாதனைகளை செய்து வருபவரும் ஆன திரு. ம. செந்தமிழன் அவர்கள் இந்த விருதுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வரவிருக்கும் ஜூன் 25 சனிக்கிழமை மாலை சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக்பேலசில் நிகழ்விருக்கும் இதற்கான விழாவில் இயக்குனர். எஸ்.பி.ஜனநாதன், முன்னாள் காவல்துறை அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதி ஐபிஎஸ், மற்றும் பத்திரிக்கையாளர் சமஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

2016ம் ஆண்டு பெரியார் சாக்ரடீஸ் விருது பெறல்..
பெருமைக்குரிய பெருந்தகையாளர்

பன்முக பண்பாட்டு ஆளுமை
ம. செந்தமிழன்
-சிறுவரைவு

Senthamizhan-3

ம. செந்தமிழன் தமிழ் ஊடகவியலாளர்கள் நன்கு அறிந்த பெயர் எழுத்தாளர் , திரைப்பட இயக்குனர் , பத்திரிக்கையாளர் என பன்முகங்கள் இருந்தாலும் செம்மை எனும் அமைப்பு மூலம் தமிழ் பண்பாட்டுத்துறையில் சமீபமாக இவர் ஆற்றிவரும் சேவைகள் முக்கியத்துவம் வாய்ந்ததும் தனித்துவமிக்கதுமாகும் நவீனமயமாக்கத்தின் கண்மூடித்தனமான பாய்ச்சலில் இன்று கல்வி, வேளாண்மை, உடல்நலம் போன்றவற்றின் அடிப்படையான கூறுகள் குழம்பிக்கிடக்கின்றன. இதன் மோசமான விளைவுகளைச் செந்தமிழன் பல்வேறு தளங்களில் உரக்கப் பேசிவருகிறார். பிரச்னைகளைச் சொல்வதோடு நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தமிழர்களின் தொல்மரபிலிருந்து உள்வாங்கி, அதை நடைமுறைக்கும் கொண்டுவர முயல்வது இவரது கூடுதல் சிறப்பு .

செம்மை வாழ்வியல் நடுவம்
இதன் பொருட்டு இவர் உருவாக்கிய “செம்மை வாழ்வியல் நடுவம்’’ எனும் அமைப்பு மிக பெரிய பண்பாட்டு தற்காப்பு போரை துவக்கியுள்ளது என்றால் அது மிகையில்லை

பிரண்டைத் திருவிழா
குறிப்பாக் 2015ல் சென்னையில் அந்த அமைப்பால் நிகழ்த்தப்ட்ட பிரண்டைத் திருவிழா தமிழர்களின் அறுபட்ட மரபு வழி வாழ்வியலை மீட்டெடுக்கும் கண்ணியாக கொண்டாட்டத் தன்மையோடு அமைந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஊர்சந்தை
இதே செம்மை அமைப்பினரால் சென்னையிலும் சிதம்பரத்திலும் நடத்தப்படும் ’ஊர்சந்தை’ தமிழர்களின் பாரம்பர்ய உணவு , விளையாட்டு , இசை ஆகியவற்றை சிரத்தை கூர்ந்து மீட்டுருவாக்கம் செய்து தொலைகாட்சி ,சினிமா மற்றும் காட்சி ஊடகங்களிலும் பிசா பர்கர் போன்ற அன்னிய உணவுகளிடம் உயிர்த்த வாழ்வையும் அடையாளங்களையும் ஒரு சேர தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு பாரம்பர்ய உயிரணுக்களை செலுத்தி நகரத்து தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சியூட்டி வருகிறது

மேலும் இயற்கை விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையைப் பெற்றுத்தரும் நோக்கில் தமிழர்களின் பண்டைய சந்தை வர்த்தக முறை கூட்டுமுயற்சியில் ஊர்சந்தையில் நிகழ்த்தப்படுகிறது.

செம்மை வனம்

செந்தமிழனின் சொந்த ஊர் தஞ்சை அருகில் உள்ள ஆச்சாம்பட்டி. இங்குள்ள இவரது வேளாண்பண்ணையான ’செம்மை வனம்’ இயற்கையோடு இயைந்து வேளாண்மையை கற்க விரும்புபவர்களுக்கு இன்றைக்கு வழிகாட்டும் இடமாக விளங்குகிறது. கூடவே மரபு மருத்துவம், மரபுக்கட்டுமானம் குறித்த வகுப்புகளும் இங்கே நடத்தப்படுகின்றன.

இதழியல் மற்றும் ஊடகப்பணிகள்

‘தினமணி’யில் செய்தியாளராகத் தனது இதழியல் பணியைத் தொடங்கிய செந்தமிழன் தொடர்ந்து குமுதம், ‘மின்பிம்பங்கள்’ தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் ‘சிக்கன் எமன்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய செய்திக்கட்டுரை முழுக்க முழுக்க இரசாயனச் சூழலில் பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுவதையும் அதன் அபாயத்தையும் தமிழில் முதன்முதலாகப் பதிவு செய்த ஆவணம். ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்கள் உலகில் செந்தமிழன் ஒரு ‘மோஸ்ட் வாண்டட்’ ஸ்கிரிப்ட் ரைட்டர். 2006இல் அந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, சொந்த ஊருக்கே திரும்பி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார்.

ஆவணப்படங்கள் மற்றும் பாலை திரைப்படம்

மௌனப்படங்களின் வரலாற்றின் ஊடே திரைப்பட முன்னோடி சாமிக்கண்ணு வின்செண்ட் குறித்து பதிவு செய்த ‘பேசாமொழி’, ஆடு மேய்க்கும் கீதாரிகளின் வாழ்க்கையைப் பேசும் ‘ஆடோடிகள்’, 2009இல் ஈழத்தில் நடத்தப்பட்ட தமிழர் இன அழிப்பில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் பங்களிப்பைச் சொல்லும் ‘தீர்ப்பு எழுதுங்கள்’, கடல் மீன்பிடி ஒழுங்காற்றுச்சட்டம்-2010இன் மோசமான பக்கங்களைச் சொல்லும் ‘நெய்தல்’ ஆகிய ஆவணப்படங்களைச் செந்தமிழன் இயக்கியுள்ளார். 2011இல் இவர் இயக்கத்தில் ‘பாலை’ திரைப்படம் வெளிவந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கைக்குள் நான்காம் ஈழப்போரைப் பொதிந்து வைத்து அழுத்தமான சில செய்திகளை அந்தப் படம் முன்வைத்தது.

எழுத்தாளர்

செந்தமிழன் எழுதிய ‘இனிப்பு’ என்ற கட்டுரைத்தொகுப்பு சர்க்கரை நோய் என்ற பெயரில் நடத்தப்படும் மருத்துவக் கொள்ளையைச் சொன்ன முதல் தமிழ் நூல். ‘பூமியில் முதல் மழை பெய்தபோது மரங்கள் இல்லை’, ‘அவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்’, ‘கரு உரு-உயிருக்கு மரணமில்லை’, ‘நமனை அஞ்சோம்’ உள்ளிட்ட இவருடைய நூல்கள் வாழ்க்கை குறித்த புதிய பார்வையை வாசகர்களுக்கு வழங்குபவை. மருத்துவம், வாழ்க்கைமுறை, பண்பாடு போன்றவை சார்ந்து முக நூலில் செந்தமிழன் எழுதிவரும் பதிவுகள் உடனடி கவனத்தையும் பெருமளவிலான வரவேற்பையும் பெற்றுவருகின்றன. மரபு வாழ்வியல் குறித்த செய்திகளைத் தாங்கிவரும் ‘வனம்’ என்ற மாத இதழையும் இவர் நடத்திவருகிறார். தற்போது ஆனந்தவிகடன் இதழில் தமிழ்ர்களின் மரபான வாழ்வியல் குறித்து புதிய தொடரையும் எழுத துவக்கியுள்ளார்

இத்தகைய அரும் பணிகளால் சிறந்து, பெரு மனிதராக பேறு அடைந்துள்ள ம. செந்தமிழன் அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டுகான பெரியார் சாக்ரடீஸ் விருது வழங்கப்படுவது விழாக்குழவினருக்கும் விருதுக்கும் மதிப்பு நிறை செயலாய் இத்தருணத்தில் உணர்கிறோம் .

ம.செந்தமிழன் வாழ்க்கை குறிப்பு :

31-10- 1977ஆம் ஆண்டு தஞ்சைதஞ்சை ஆச்சாம்பட்டியில் பிறந்தவர் ம. செந்தமிழன். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் – சக போராளியாகப் பயணிக்கும் இலட்சுமி அம்மாள் இவருடைய பெற்றோர். செந்தமிழனின் பணிகளுக்குத் தோள்கொடுக்கும் வாழ்க்கைத்துணையாக அவருடைய மனைவி காந்திமதி செயல்படுகிறார். இவர்களுக்கு நிகரன் என்ற மகனும், அருவி, முல்லை என இரு மகள்களும் உள்ளார்கள்.

இப்படிக்கு
ஒருங்கிணைப்பாளர்கள்

டாக்டர். நாச்சிமுத்து. M
எழுத்தாளர். அஜயன் பாலா

(பெரியார் சாக்ரட்டீஸ் விழா குழு )

Share