மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் துவங்குகிறது…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் துவங்குகிறது…

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம் – அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது.

கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என தொடர்ந்து வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரிக்கிறது.

படைப்பாளி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. கபடி விளையாட்டை மையப்படுத்திய படைப்பாக உருவாகிறது. அனைத்து தரப்பிலும் எதிரிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் துணிச்சலையும், தைரியத்தையும் வாழ்வியலாக கொண்ட இளைஞனின் கதையை சொல்கிறது இந்த திரைப்படம். இந்தக் கதை- ஒரு மனிதன் விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, வன்முறையற்ற.. அமைதியான.. மரணமற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும் போராட்டத்தை விவரிக்கிறது.

தனித்துவம் மிக்க நட்சத்திர நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பிரேமம்’, ‘குரூப்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

திரைப்படத்தைப் பற்றி அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் பேசுகையில், ” நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனான எங்களது ஒத்துழைப்பு.. அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுகான ஒரு அற்புதமான அத்தியாயத்தை குறிக்கிறது. இந்தக் கூட்டணி ஒரு அசாதாரணமான விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்துடன் தொடங்கி, தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை தேர்வு செய்வதில் எங்களது அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது. இயக்குநர் மாரி செல்வராஜின் திறமை மற்றும் திறன் மிகு தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது” என்றார்.

நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் பா.ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் பேசுகையில், ” பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நீலம் ஸ்டுடியோஸ், மாரி செல்வராஜுடனும் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது. அர்த்தமுள்ள சினிமா மற்றும் உண்மையான கதைகளுக்கான எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ” பரியேறும் பெருமாள்- பா ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். என்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு அது ஒரு படிக்கல்லாக அமைந்தது. அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். மீண்டும் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. பரியேறும் பெருமாள் முதல் என்னுடைய அனைத்து படைப்புகளையும் அதிதி ஆனந்த் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் ஒரு நல்ல தோழியும் கூட. மேலும் அவருடைய உள்ளார்ந்த ஆதரவுடன் இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும்.. திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பற்றி…

தொலைக்காட்சி தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சி, இணைய தொடர், திரைப்படம், ஆவண படங்கள் மற்றும் அனிமேஷன் படைப்புகளுக்கு உள்ளடக்கம் மற்றும் கதை கருவினை வழங்கும் முன்னணி ஸ்டூடியோவாக அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் திகழ்கிறது. இது ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு பிரிவாக இயங்குகிறது. மேலும் ஊடகத்துறை நிபுணரான சமீர் நாயரின் வழிகாட்டலில் செயல்படுகிறது.
இந்த ஸ்டுடியோ ஏராளமான தொடர்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. வெவ்வேறு ஜானரில்… வெவ்வேறு மொழிகளில்… நிகழ்ச்சிகளையும் வழங்கி இருக்கிறது. குறிப்பாக ‘ருத்ரா : தி எட்ஜ் ஆப் டார்க்னெஸ்’, ‘கிரிமினல் ஜஸ்டிஸ்’, ‘ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’, ‘ஸ்கேம் 2003 : தி தெஹல்கி ஸ்டோரி’, ‘உன்டேகி’, ‘கஃபாஸ்’ என பல தொடர்கள் பார்வையாளர்களின் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது. அத்துடன் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், நந்திதா தாஸ் இயக்கத்தில் நடிகர் கபில் சர்மா நடிப்பில் ‘ஸ்விகாடோ’ எனும் திரைப்படத்தை தயாரித்து, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டு, விமர்சன ரீதியாக பெரும் பாராட்டையும் பெற்றது. இதனுடன் இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் சினிமாவான ‘போர் தொழில்’ திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றதுடன், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் அமோக வரவேற்பையும் பெற்றது. மேலும் அபர்ணா சென் இயக்கத்தில் உருவான ‘தி ரேப்பிஸ்ட்’ எனும் திரைப்படம் அண்மையில் பூஸன் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு மதிப்புமிக்க கிம் ஜிஜோக் விருதை வென்றது. அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் – டிஜிட்டல் தள உலகில் முன்னணியில் திகழும் நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லைவ், எம் எக்ஸ் ப்ளேயர், ஜீ5 மற்றும் வூட் செலக்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆக்கபூர்வமான படைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை செய்து வருகிறது.

நீலம் ஸ்டுடியோஸ் பற்றி…

இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோரால் தொடங்கப்பட்ட நீலம் ஸ்டுடியோஸ் – புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களின் திறமையை.. நிலையான வணிக நடைமுறைகளுடன் உருவாக்கி, வெற்றி பெற வைப்பதுடன்.. நீலம் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் இந்தியத்தனத்துடன் கூடிய சுதந்திரமான உள்ளடக்கத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர அடையாளங்களில் ஒருவராக ஜொலிக்கும் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ ஆகிய படைப்புகள் வெளியாகி இருக்கிறது. விரைவில் சீயான் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ எனும் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

அதிதி ஆனந்த் – தொழில் முனைவோர், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராவார். அவரது தயாரிப்பில் ‘தேரே பின்லேடன்’, ‘நோ ஒன் கில்ட் ஜெசிக்கா’, ‘பான் சிங் தோமர்’, ‘சில்லார் பார்ட்டி’ மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தி ஜேர்னி ஆப் த ஃபக்கீர்”, ‘பெரனீஸ் பெஜோ’, ‘பர்கத் அப்ட்டி’ மற்றும் ‘எரின் மோரியாரிட்டி’ ஆகிய திரைப்படங்கள் உருவாகி இருக்கிறது.

பா. ரஞ்சித் – அதிதி ஆனந்த் ஆகிய இருவரும் இணைந்து, இயக்குநர் பிராங்கிளிங் ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘ரைட்டர்’ எனும் விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் பாராட்டைப் பெற்ற திரைப்படத்தை தயாரித்தனர். மேலும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ் நடிப்பில் உருவான ‘ஜே பேபி’ எனும் திரைப்படம் அண்மையில் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கலையரசன், தினேஷ், ஷபீர், ரித்விகா மற்றும் வின்சு ரேச்சல் ராம் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தண்டகாரண்யம்’ எனும் திரைப்படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Share