“சீரன்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

“சீரன்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

Netco Studios சார்பில் ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராஜேஷ் M அவர்களின் அசோசியேட்  இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா நடிப்பில் சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் ‘சீரன்’. மேலும் ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்ரமணி, ஆரியன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டை ஓட்டி படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் பேசியதாவது..,
இந்தப் படம் எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, எங்களுக்கு ஆதரவு அளிக்க வந்துள்ள அனைவருக்கும் நன்றி. தயாரிப்பிலும் நடிப்பிலும் இந்தப் படத்தில் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்த சோனியா அகர்வால், நரேன் மற்றும் இனியா அவர்களுக்கு நன்றி. மேலும் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றி. இயக்குநர் எனக்கு மிகச்சிறந்த நண்பர். அவருடன் இணைந்து பல படங்கள் செய்ய நினைக்கிறேன். எனக்கும் அவருக்கும் சில வாக்குவாதம் இருக்கும் ஆனால் அது படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. அவரிடம் பல விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன். தயாரிப்பாளருக்கு 1 ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது என்று நினைப்பவர் இயக்குநர், அதே போல் ஒளிப்பதிவாளர் மிகவும் சிறந்த காட்சிகளை இந்தப் படத்தில் உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது நன்றி. பாடல்களும் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நான் என் சிறு வயதில் பார்த்த விஷயங்களை இந்தப் படத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் துரை K முருகன் பேசியதாவது..,
நான் இந்த இடத்தில் இருப்பதற்குக் காரணம் என் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக், அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படத்தின் EP அழகு கார்த்தி தான் தயாரிப்பளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் அவருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தப் படம் தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அவர் சொன்னதைக் கேட்ட போது, என் சிறு வயதில் என் தாத்தா, எத்தனை ஜாதிவெறியுடன் இருந்துள்ளார் என்ற ஞாபகமும் மிகப்பெரும் கோபமும் வந்தது. அதனை அழுத்தமாக இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.  இந்தப் படத்தில் இனியா மற்றும் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்களுக்குக் கண்டிப்பாக இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பெயர் வாங்கி தரும். கதாநாயகன் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் ஒட்டு மொத்த உணர்வையும் கொடுத்து, சமூக கருத்தையும் பதிவு செய்யும். இந்தப் படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி.

நடிகை இனியா பேசியதாவது,
இந்தப் படத்தில் பூங்கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக எடை கூட்டிக் குறைத்து நடித்துள்ளேன். நான் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் படத்தில் பாடல் காட்சிகளில் நடிக்கும் போது சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஒரு திறமையான தயாரிப்பாளர் மற்றும் நல்ல நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறேன். நான் இவரைப் பார்த்து சில தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ள உள்ளேன். இயக்குநர் மிகவும் பக்குவம் நிறைந்தவர், அவருக்குத் தேவையானது என்ன என்பதில் தெளிவாக இருந்தார். பல பிரச்சனை நடந்தாலும் எந்த விஷயங்களும் படத்தைப் பாதிக்காதவாறு இந்தப் படத்தை அருமையாக உருவாக்கியுள்ளார். அதே போல ஒளிப்பதிவாளர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். மேலும் இந்தப் படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது..,
இந்தப் படம் ஒரு சமூக அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு இதன் கதை மிகவும் பிடித்திருந்தது. கோவில் படத்திற்குப் பிறகுக் கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தயாரிப்பாளர் மிகவும் சிறப்பாகத் தனது பணியைச் செய்துள்ளார். மேலும் அவரது கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கண்டிப்பாக இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறும். இயக்குநர் ஃபாஸ்டாக வேலை செய்வார் ஆனால் கச்சிதமாக காட்சிகளை உருவாக்கிவிடுவார். படத்தை நன்றாக எடுத்துள்ளார்  ஒளிப்பதிவாளர் மிகவும் பொறுமைசாலி அருமையாகக் காட்சியைப் படமாக்கியுள்ளார். படக்குழு அனைவருக்கும் நன்றி. உங்களுடன் பணி புரிந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் ஆடுகளம் நரேன் பேசியதாவது..,
இது ஒரு உண்மைக் கதை. இப்படியெல்லாம் நடக்குமா என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது. இப்படி ஒரு முயற்சியைச் செய்ததற்குப் பாராட்ட வேண்டும். முதல் படம் போலவே இல்லை அழகாக நடித்துள்ளார் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக். இயக்குநர் பல போராட்டங்களுக்கு பிறகு இந்தப் படத்தைக் கொண்டு வந்துள்ளார். தனக்கு காட்சி எப்படி வேண்டுமோ அது வரும் வரை விடமாட்டார், கடுமையான உழைப்பாளி, இன்னும் பெரிய இடத்திற்குச் செல்வார். நீங்கள் தான் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். யாரையும் இந்த படம் ஏமாற்றாது, அனைவருக்கும் ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும் நன்றி.

நடிகை அருந்ததி நாயர்  பேசியதாவது..,
நான் மேடையில் பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இந்தப் படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால் அது ஒரு முக்கியமான கதாபாத்திரம், கண்டிப்பாக உங்களை கவரும். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு எனது நன்றிகள்.
நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது,
இந்தப் படம் மிக விரைவில் சீறிப்பாயும் இயக்குநர் துரை அண்ணன் மிகவும் நெருக்கமானவர், மிகவும் பரபரப்பு மிகுந்தவர்  அவரது வேகத்துக்கு ஈடே கொடுக்க முடியாது, இந்தப் படத்துக்காக பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், தயாரிப்பாளர் இந்தப் படத்தில் மிகவும் அருமையாக நடித்துள்ளார், இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரு நல்ல நட்பைக் கொண்டு, இந்தப் படத்தை உருவாக்கினார்கள், இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி பேசியதாவது,
நான் பல படங்களில் நடித்துள்ளேன், அதில் பல கதாபாத்திரங்கள் என் மனதிற்கு நெருக்கமானவை. ஆனால் இன்றும் என்னிடம் பலர் பேசும் ஒரு கதாபாத்திரம் நான் முண்டாசுப்பட்டி படத்தில் நடித்த சாமியார் கதாபாத்திரம். அது எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இந்தப் படத்திலும் நான் ஒரு பூசாரியாக நடித்துள்ளேன். அதே போல இந்தப் படமும் ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்று இந்த படக்குழுவினரை வாழ்த்துகிறேன்.

நடிகர் ஆஜித் பேசியதாவது..,
நான் ஒரு கிராமத்துப் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. ஆரம்பத்தில் எனக்கு இது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் இயக்குநர் எனக்குப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார். அவருக்கு எனது நன்றி. உண்மையில் நடந்த நிகழ்வைப் படமாக உருவாக்கியுள்ளோம். எங்களுக்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும். தயாரிப்பாளர் மற்றும் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி.

இசையமைப்பாளர் AK சசிதரண் பேசியதாவது..,
இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் உள்ளது. நானும் என் நண்பர்களும் இணைந்து இந்தப் படத்தின் பாடல்களை உருவாக்கியுள்ளோம். அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளது, கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

இசையமைப்பாளர் ஜூபின் பேசியதாவது..,
இந்தப் படத்திற்கு எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. பின்னணி இசையை முன்னோட்டத்தில் பார்த்திருப்பீர்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்துள்ளது என்று நம்புகிறேன். படம் பல உண்மைகளை உடைத்து கூறியுள்ளது. இயக்குநர் இசைக்காக என்னைப் படாத பாடு படுத்தி விட்டார். படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் மிகவும் யதார்த்தமாக இருக்கும், இந்தப் படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் நன்றி.

எடிட்டர் ரஞ்சித் குமார் பேசியதாவது..,
இந்தப் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் பேசியதாவது..,
இந்தப் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

சண்டை பயிற்சியாளர் ரமேஷ் பேசியதாவது..,
இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நெருங்கிய நண்பர். இந்தப் படம் எடுக்க மிகப்பெரிய பொருட் செலவு ஆனது. சின்னப் படம் என்றாலும் தயாரிப்பாளர் பெரிய அளவில் செலவுகளைச் செய்துள்ளார். படத்தை நன்றாக எடுக்க அது மிகவும் உதவியாக இருந்தது. மொத்த குழுவும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் திறமையாகக் காட்சிகளைக் கையாண்டுள்ளார், படத்தில் நீங்கள் அதைப்பார்ப்பீர்கள். சண்டைக்காட்சிகளில் எனக்குத் தேவையான அனைத்தையும் செய்து தந்தனர். நீங்கள் தான் இந்தப் படத்தைக் கொண்டு போய் மக்களிடம் சேர்க்க வேண்டும் நன்றி.

நடிகர் ஆர்யன் பேசியதாவது..,
தயாரிப்பாளர் ஜேம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், மேலும் பல படங்களில் நீங்கள் நடித்து வெற்றி பெற வேண்டும். இயக்குநர் மிகவும் துல்லியமானவர். தனக்குத் தேவை எது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு வேலை வாங்குபவர். அவரிடம் வேறு வேறு ஜானரில் மூன்று சிறந்த கதைகள் இருக்கிறது விரைவில் அவை படமாக வெளிவரும்.  ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் இடையே பல விவாதம் ஏற்பட்டது, ஆனால் அனைத்தும் நன்மைக்கே. அது படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றது. படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சண்டைக் காட்சிகளும் அருமையாக இருந்தது. இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

கவிஞர் கார்த்தி பேசியதாவது..,
இந்த சீரன் படம் சீர்திருத்தம் செய்ய போகின்ற ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதியுள்ளேன். அனைத்தும் நன்றாக வந்துள்ளது, உங்களுக்குப் பிடிக்கும். படத்தில் மூன்று பெண் கதாபாத்திரம் உள்ளது, அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

நடிகை கிரிஷா குருப் பேசியதாவது…
முதலில் இயக்குநருக்கு எனது மிகப்பெரிய நன்றிகள், எனக்கு இன்றும் நியாபகம் இருக்கிறது நான் சென்னையில் வேறொரு படத்தின் படப்பிடிப்பிற்காக வந்திருந்தேன் அப்போது தான் எனக்கு இந்த கதையை கூறினார், இந்தப் படத்தை முதன் முதலில் எப்படிக் கூறினாரோ.. அதே போலவே படமும் உருவாகியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த யாழினி கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்ததற்கும் நன்றி,  இந்தப் படத்தில் ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன், நான் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை, நடிகர்  ஆஜீத் ஒரு பக்க பலமாக இருந்தார், அவரது ஒத்துழைப்பு படப்பிடிப்பில் மிகவும் உதவியாக இருந்தது ஆஜித்துக்கு மிகவும் நன்றி, நடிகை இணியாவுடன் ஒரு சிறிய காட்சி உள்ளது அது எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது,  அவரிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன், ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது நன்றி, பாடல்கள் அழகாக வந்துள்ளது, என்னை அழகாக காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் பாஸ்கர் சாருக்கு நன்றி, எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த  தயாரிப்பாளர் கார்த்திக் சாருக்கு நன்றி, உங்களின் ஆதரவை படத்திற்குத் தர வேண்டும் நன்றி.

பரியேறும் பெருமாள் வெங்கடேஷ் பேசியதாவது…
என்னை இதுவரை ஒரு அரக்கானாகக்தான் படத்தில் காட்டியுள்ளார்கள் ஆனால் இந்தப்படத்தில் என்னை அன்பான அப்பாவாக காட்டியுள்ளார். அதற்காக அவருக்கு மிக்க நன்றி.  இயக்குநர் மிக நன்றாக படத்தை எடுத்துள்ளார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

Share